» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காரில் கடத்தி வந்த 282 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது
புதன் 30, நவம்பர் 2022 11:24:01 AM (IST)
தூத்துக்குடியில் காரில் கடத்திவந்த 282 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தாளமுத்துநகர் பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் அருகில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் தாளமுத்துநகர் அருகே பாக்கியநாதன்பிளையை சேர்ந்த போவாஸ் (33), இந்திராநகரை சேர்ந்த ராஜேஷ் (40), கீழஅழகாபுரியை சேர்ந்த முத்துக்குமார்(30) என்பதும், காரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்து கடைகளுக்கு சப்ளை செய்வதும் தெரியவந்தது. மேலும் இதில் பாக்கியநாதன்பிள்ளையை சேர்ந்த எபனேசனர்(31), எலியாஸ்(32) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்ததோடு, காரில் இருந்த 282 கிலோ குட்காவுடன் கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகிறார்.