» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மான் உயிரிழந்த சம்பவம்: வனத்துறை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

செவ்வாய் 29, நவம்பர் 2022 3:20:00 PM (IST)

உடன்குடி அருகே கயிறு கட்டி இழுத்தபோது மான் உயிரிழந்த சம்பவத்தில் வனத்துறை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி, குலசேகரன்பட்டினம், பகுதிகளில் ஏராளமான காட்டு மாடுகள், மான்கள் வசித்து வருகின்றன. அந்த விலங்குகள் இறை தேடி தெருக்களில் வலம் வருவது வழக்கம். இந்நிலையில், கடமான் என அழைக்கப்படும் மிளா ஒன்று உடன்குடி கடைவீதி பகுதிக்குள் கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு நுழைந்தது. அதைக் கண்ட வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருச்செந்தூர் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். 

சிறிது நேரத்தில் அந்த கடமான் அங்குள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் சென்றது. இதையெடுத்து, அந்தப் பகுதியில் இருந்து கடமான் வெளியேறாதப்படி தடுப்பு வைத்து பொதுமக்கள் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் கயிற்றை பயன்படுத்தி சுருக்கு கயிறு போட்டு கடமானை பிடிக்க முயன்றனர். பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் அதிகம் கூடியிருந்ததால் அவர்களை கண்ட கடமான் அங்கும் இங்குமாக மிரண்டு ஓடியது. 

வனத்துறையினர் ஒரு முட்டு சந்து பகுதியில் நின்ற கடமானில் கழுத்தில் சுருக்கு கயிறை மாட்டினர். அப்போது பயத்தில் கடமான் அங்கும் இங்கும் ஓடியதால், அதன் கழுத்தில் சிக்கிய கயிறு இறுகியதில் கடமான் மயங்கி கீழே விழுந்தது. இதைத்தொடர்ந்து, மயங்கி விழுந்த கடமானை மீட்ட வனத்துறையினர் திருச்செந்தூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனை செல்வதற்குள் கடமான் பரிதாபமாக உயிரிழந்தது. 

ஊருக்குள் புகுந்த கடமானை வனத்துறையினர் சுருக்கு கயிறு போட்டு பிடித்ததால் தான் கழுத்தில் இறுகி உயிரிழந்துவிட்டதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். வனத்துறையினர் 3 பேர் சஸ்பெண்டு: உடன்குடியில் ஊருக்குள் புகுந்த கடமான் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வேகமாக பரவியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜியிடமும் பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, கடமான் இறந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்படி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமருக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டதில் வனத்துறையினரின் கவனக்குறைவாக செயல்பட்டதாக தெரியவந்தது. இதையெடுத்து, கடமானை பிடிக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் வனவர் ஆனந்த், வனக்காப்பாளர் தங்கசாமி, வன காவலர் ஜோஷ்வா ஆகிய மூவரையும் சஸ்பெண்டு செய்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory