» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை கனிமொழி எம்பி ஆய்வு
செவ்வாய் 29, நவம்பர் 2022 11:35:34 AM (IST)
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால் பழைய மாநகராட்சி அலுவலகம், பாளையங்கோட்டை ரோடு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் வழக்கம் போல் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்த பகுதிகளில் கனிமொழி எம்.பி., ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழைநீரை விரைவாக வெளியேற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். மேலும், மழைநீர் வழிந்தோட அமைக்கப்பட்டுள்ள வடிகால்களில் சீராக தண்ணீர் வெளியேறுகிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி தனசேகர் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர்ப் பகுதிகளில் நிறைவடைந்துள்ள மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார். சில இடங்களில் வடிகால்களில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி தண்ணீர் விரைவாக வழிந்தோட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அவருடன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.