» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில் கதவை உடைத்து நகைகள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 29, நவம்பர் 2022 10:25:15 AM (IST)
எட்டயபுரம் பகுதியில் கோவில் கதவை உடைத்து நகைகளையும், 3 கடைகளிலும் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் கான்சாபுரம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் பூசாரி கோவில் நடையை அடைத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை காலை 5.30 மணியளவில் கோவிலுக்கு வந்தபோது கோவிலில் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், 15 கிராம் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எட்டயபுரம் மெயின் பஜாரில் முனியசாமி என்பவரின் கடையை உடைத்து மர்மநபர்கள் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுள்ளனர். அதேபோன்று, எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈராலில் மாடசாமி, பொன்ராஜ் ஆகிய 2 பேரின் பெட்டிக்கடைகளை உடைத்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்று விட்டனர். இப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.