» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் தீக்குளிக்க முயற்சி: கோவில்பட்டியில் பரபரப்பு
சனி 24, செப்டம்பர் 2022 5:28:31 PM (IST)
சான்றிதழ் வழங்க அதிகாரிகள் அலைக்கழித்ததாக, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பிச்சம்மாள். இவரது கணவர் முருகன் கடந்த 2018, ஏப்ரல் 21ஆம் தேதி உடல்நலக் குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து பிச்சம்மாள் தனது பெண் குழந்தை சுடலைக் கனியுடன் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும், தனக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்தார்.
இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆவணங்களுடன் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வந்த பிச்சம்மாள், நேற்று மாலை மண்ணெண்ணெய் கேனுடன் கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடந்து வந்தார்.
அப்போது அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை கவனித்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை போலீஸார் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜா, பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கையை முறையாக விசாரித்து இன்னும் 1 வாரத்தில் உரிய பதிலளிக்கப்படும் எனக் கூறினார். மேலும் தங்கள் கோரிக்கையை அதிகாரிகளிடம் எடுத்துக் கூற வேண்டுமே தவிர இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தையை பாதுகாப்பதோடு குழந்தைகளுக்குமுன் உதாரணமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.