» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இசை மேதை நல்லப்ப சுவாமியின் 134வது ஜெயந்தி விழா
சனி 24, செப்டம்பர் 2022 4:19:21 PM (IST)
விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமியின் 134 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கர்நாடகா இசையிலும் கரஹரப்பிரியா ராகத்திலும் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் விளாத்திகுளம் இசை மேதை நல்லப்ப சுவாமி. இவர் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடியில் மன்னர் குடும்பத்தில் பிறந்தவர்.பின்னர் காடல் குடியில் இருந்து விளாத்திகுளத்திற்கு குடும்பத்துடன் குடியேறி வாழ்ந்தனர்.
பிறப்பு முதலே நல்லப்ப சுவாமிக்கு இசையில் ஆர்வம் இருந்ததால் அவரது காலகட்டத்தில் கர்நாடக இசையில் பெரும் புலமை பெற்று திகழ்ந்தார். பாரதியார் இவரது நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். இசையின் மூலம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் புகழ்பெற்றவர் இசை மேதை நல்லப்ப சுவாமி. தியாகராஜ பாகவதர்,சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நல்லப்ப சுவாமி மீது பற்று கொண்டிருந்தனர்.
இசை உலகின் மாமேதையாக இருந்த நல்லப்ப சுவாமிக்கு நினைவுத்தூண் விளாத்திகுளம் கண்மாய் அருகே உள்ளது. அவரது 134-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் நல்லப்ப சுவாமியின் நினைவுத்தூன் மற்றும் அவரது திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில தலைவர் கோபால்சாமி, மாவட்ட தலைவர் கண்ணன், கொள்கை பரப்புச் செயலாளர் ராமலிங்கம், எழுத்தாளர் சிவக்குமார், நல்லப்ப சுவாமி (மகள்வழி) வாரிசுகள் சாமித்துரை, கண்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, செல்வகுமாா், மும்மூர்த்தி, கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்,மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்