» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை திட்டியதால் பிளஸ் 2 மாணவர் திடீர் மாயம்!
சனி 24, செப்டம்பர் 2022 12:21:41 PM (IST)
தூத்துக்குடி அருகே சரியாக படிக்காததால் தந்தை திட்டியதால் பிளஸ் 2 மாணவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு சரியாக படிப்பு வராததால் தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவர் கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு மாணவர் மாயம்!
இதுபோல் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 22ஆம் தேதி ஜிம்முக்கு சென்று விளையாடிவிட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகிறார்.