» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1619 ஆக அதிகரிப்பு : ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்!
சனி 24, செப்டம்பர் 2022 10:22:36 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1619ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 29ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர்/உதவி வாக்காளர் பதிவு அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மற்றும் பொது மக்களின் வேண்டுகோளின்படியும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், வாக்குச்சாவடி இடமாற்றம் /பெயர் மாற்றம் செய்தல் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டது.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 1500 வாக்காளர் களுக்கு மேல்/ 2 கி.மீ தூரத்திற்கு மேல் உள்ள வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. 10 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்/ கட்டிட மாற்றம் செய்யப்பட உள்ளது. 4 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 1611 வாக்குச்சாவடி மையங்கள் உள்ள நிலையில் 8 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளது. மொத்தம் 1619 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளது.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிகள் கலந்துக்கொண்டனர்.