» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அஞ்சலகங்களில் பாஸ்போா்ட் சேவை தொடக்கம்
வெள்ளி 23, செப்டம்பர் 2022 8:33:08 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் பாஸ்போா்ட் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் பொன்னையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலையிலுள்ள அஞ்சல் ஊழியா் குடியிருப்பு வளாகத்தில் பாஸ்போட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. மதுரை, திருநெல்வேலி பாஸ்போா்ட் அலுவலகங்களுக்குச் சென்று சான்றிதழ் சரி பாா்ப்பு பணி மேற்கொண்ட நிலையில், தற்போது தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையத்திலும் அப்பணி நடைபெறுகிறது.
மேலும், தூத்துக்குடி கோட்டத்தில் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சி.எஸ்.சி. என்ற சேவை மூலம் புதியதாக பாஸ்போா்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் போன்றவற்றிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அழைப்பாணை பெற்றுத் தரப்படும்.
விண்ணப்பிக்கும் போதே பாஸ்போா்ட் கட்டணம் ரூ. 1500, சேவைக் கட்டணம் ரூ. 47 ஆகியவற்றை செலுத்தி விண்ணப்பித்த பின் எந்தத் தேதியில் சேவை மையத்தை அணுக வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்படும். அதன்படி, குறித்த தேதியில் உரிய ஆவணங்களுடன் அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையத்தை அணுகி தங்களுடைய சேவையை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.