» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மக்களை குழப்பும் அரசு பேருந்துகள்: தடம் மாறி செல்வதால் பயணிகள் அவதி..!

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 4:33:19 PM (IST)



தூத்துக்குடியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெயர் பலகையால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

பொதுவாக அரசு நகர பேருந்துகள், எந்தெந்த ஊர் வழியாக இயங்குகிறது என்பதை பயணிகளுக்கு வழிகாட்டும் விதத்தில், பக்கவாட்டு பகுதியிலும், முன்புற மற்றும் பின்புற கண்ணாடியிலும் முக்கிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டு உள்ளன. கடைசியாக சென்றடையும் ஊரின் பெயர் பஸ்சின் முன்புறமும், பின்புறமும் பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் எழுதப்பட்டு இருக்கும்.

ஆனால், தூத்துக்குடியில் இயங்கும் அரசு பஸ்களில் பயணிகளை குழப்பும் வகையில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டு உள்ளன. பழைய பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட், முள்ளக்காடு வழியாக தென் பகுதியிலுள்ள ஆத்தூர் செல்லும் அரசு டவுண் பஸ்சின் முன்புள்ள பெயர் பலகையில், சொக்கலிங்கபுரம் என பெயர் எழுதிய தாளை ஒட்டி புதுக்கோட்டை வழியாக தடம் மாறி மேற்கு பகுதிக்கு இயக்கப்படுகிறது.

அதுபோல, முள்ளக்காடு வழியாக கோவங்காடு செல்லும் அரசு பஸ்சின் முன்புள்ள பெயர் பலகையில் ஆறுமுகமங்கலம் ஊர் பெயரில் எழுதி தடம் மாறி இயக்கப்படுகிறது. இதனால், கோவங்காடு செல்வதற்காக இந்த பஸ்சில் ஏறி உட்கார்ந்த பயணிகள் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து நடத்துனர்களிடம் கேட்ட போது, "பஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இதுபோன்று மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது" என்றனர்.
 
மேலும், மார்க்கெட், ஸ்பிக்நகர், முள்ளக்காடு வழியாக கோவங்காடு செல்லும் தடம் எண் 54-ஏ, ஆத்தூர் செல்லும்தடம் எண் 54-பி போன்ற பஸ்களில் வழித்தட பெயர்களின் வரிசையில் ஸ்பிக்நகர் என்று எழுதுவதற்கு பதில், 'ஸிபிக்நகர்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், வெளியூர் பயணிகள் ஸ்பிக்நகர் என்றும், ஸிபிக்நகர் என்றும் 2 ஊர்கள் உள்ளதா என கேட்பது வாடிக்கையாக உள்ளது. சிலர் ஸ்பிக்நகர் பெயர்தான் 'ஸிபிக்நகர்' என மாற்றப்பட்டு விட்டதா என குழப்பம் அடைகின்றனர்.

குறிப்பாக, ஸ்பிக்நகர் நிறுத்தம் வந்தவுடன், ஸ்பிக் டிக்கட் எடுத்தவர்களை இறங்குமாறு நடத்துனர் கூறும் போதெல்லாம், சிலர் நடத்துனரிடம் "ஸிபிக்" போகாதா?" என கிண்டலாக கேட்பதும் வாடிக்கையாகி விட்டது. இதுகுறித்து, தூத்துக்குடி மாநகர காந்திய சேவா மன்ற செயலாளர் த.பால்துரை கூறும் போது, "அரசு டவுண் பஸ்களில் தடம் எண்களை சமீபத்தில்தான் மாற்றி அமைத்துள்ளனர். அதற்குள் தடம் மாறி பஸ்களை இயக்குவதும், ஊர் பெயர்களை தவறாக எழுதியுள்ளதும் மக்களை ரொம்ப குழப்புகின்றன. இதனை உடனே போக்குவரத்து கழகம் சரிசெய்ய வேண்டும்" என்றார்.


மக்கள் கருத்து

ராமர்Aug 18, 2022 - 09:03:32 PM | Posted IP 162.1*****

இப்படி சாலை வசதிகள் சரியில்லாத காரணத்தால் பேருந்துகள் பட்டையுடையவு டயர் பஞ்சர் என்று வரும் பொழுது மாற்று பேருந்து கொடுத்து இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது இருந்த போதும் ஊடகவியலாளர் கருத்துக்களை பதிவு செய்துள்ளார் செய்வது அவரது தனிப்பட்ட கருத்தாகும்

TN 69Aug 18, 2022 - 08:07:51 PM | Posted IP 162.1*****

குறைந்த அளவு பேருந்துகள் கொண்ட நமது டெப்போவில், தூத்துக்குடி மாநகர புறநகர் பேருந்துகளை அதிக வழித்தடத்தில் இயக்குகிறார்கள். நம்மாவட்ட அரசுபேருந்து கிளையில் காலம் காலமாக நடக்கின்றது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory