» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் செல்போன்களை திருடிய ரவுடி உட்பட 2 பேர் கைது
புதன் 17, ஆகஸ்ட் 2022 9:36:07 PM (IST)
தூத்துக்குடியில் செல்போன்களை திருடிய ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.33ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தென்பழனி காலனியைச் சேர்ந்த சுப்பையன் மகன் மகாலிங்கம் (40) என்பவர் தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவிற்காக தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் பானிபூரி கடை போட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 03.08.2022 அன்று மகாலிங்கம் மற்றும் கடையில் வேலை பார்க்கும் நபர்கள் 3 செல்போன்களை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளனர். மறுநாள் காலை எழுந்து பார்க்கும்போது செல்போன் திருடு போனது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி பி.வி.ஆர் புரம் பகுதியைச் சேர்ந்த கோல்மன் மகன் விஜய் (30) மற்றும் ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த அஷ்வல்ட் மகன் பிரசாத் (26) ஆகிய 2 பேரும் செல்போன்களை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விஜய் மற்றும் பிரசாத் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட மொத்தம் ரூ.33ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தார். மேலும் விஜய் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் மற்றும் வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் 11 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.