» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி : ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:21:55 AM (IST)
சென்னையில் நடைபெற உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியில் பதிவு செய்ய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் மகளிர் திட்டம் மூலம் கிராமப்புற மற்றும் நகர்புற மகளிரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், குழு உறுப்பினர்களுக்கு நிர்வாக பயிற்சி மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி, வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சிகள் (தொழில் முனைவோர் பயிற்சி) அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொழில் முனைவோர்களாக உருவாகி சுய தொழில் செய்து வருகின்றனர்.
மேலும் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. கண்காட்சி மற்றும் விற்பனை மூலம் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 25.08.2022 முதல் 07.09.2022 வரை 14 நாட்கள் "மண்டல அளவிலான மதி சாராஸ் மேளா” என்ற பெயரில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி மற்றும் நவராத்திரி கண்காட்சி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் அனைத்து வகை பொருட்களும் கண்காட்சி மற்றும் விற்பனையில் வைத்து விற்பனை செய்ய வாய்ப்பு தரப்படுகிறது. ஆகவே, கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவின் பெயர், முகவரி, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்களை 20.08.2022 மாலை 5.00 மணிக்குள் தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2வது தளம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) நேரடியாக பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தொடர்புக்கு இவ்வலுவலக தொலைபேசி எண்: 0461-2341282 என மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.