» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 11:53:01 AM (IST)
தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 75வது ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநரும் பள்ளியின் நிர்வாகக் குழுவின் தலைவருமான இராமகிருஷ்ணன் தேசியக் கொடி ஏற்றி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் நாம் அரும்பாடு பெற்று அடைந்த விடுதலையைப் பற்றியும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 22 சதவீதத்தை உலகிற்கு வழங்கியதையும் பெருமைப்படுத்தினார். மேலும் மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி பெற வேட்கை, கவனம், கடின உழைப்பும, அர்ப்பணிப்பும், திட்டுமிடுதலில் நெகிழ்வுத்தன்மை, உலகளாவிய சகோதரத்துவம் இவற்றைப் பின்பற்ற தன் உரை மூலம் அறிவுறுத்தினார்.
இவ்விழாவிற்கு ஸ்பிக் நகரியத்தின் முதல் பெண்மணி அகிலா ராமகிருஷ்ணன், பள்ளியின் செயலர் பிரேம் சுந்தர், பாலு, தலைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், விடுதலையின் சிறப்புகள் பற்றிய தமிழ் மற்றும் ஆங்கிலச் சொற்பொழிவுகள், மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நாடகம் ஆகியவை இடம்பெற்றிருந்தது. மாணவிகள் குழுவாகக் கோலாட்டத்தின் மூலம் சுதந்திரத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.