» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடம்பூரில் ரூ.44.71 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் வழங்கினர்
ஞாயிறு 14, ஆகஸ்ட் 2022 10:53:00 AM (IST)
கடம்பூர் கிராமத்தில் 131 பயனாளிகளுக்கு ரூ.44.71 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் கடம்பூர் ஊராட்சி வி.எம்.ஆர்.எஸ். மாரியப்ப நாடார் - இராமலெட்சுமி அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 131 பயனாளிகளுக்கு ரூ.44.71 இலட்சம் மதிப்பில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது: நாங்கள் உங்களை கடந்த 24.4.2022 தேதி இதே மண்டபத்தில் சந்தித்து மனுக்கள் வாங்கினோம். மனுக்களை வாங்கிவிட்டு அதோடு போய்விடாமல், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதை நம்பி மனுக்கள் மீது பட்டாக்கள் மற்றும் நீங்கள் கேட்டிருக்கக்கூடிய உதவித்தொகை இதையெல்லாம் வழங்குவதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்தி பட்டாக்களை நீங்கள் கேட்டிருக்கக்கூடிய உதவிகளை செய்யக்கூடிய நாளாக இந்த நிகழ்ச்சி இங்கு நடந்துகொண்டிருக்கிறது.
நம்முடைய தமிழக முதல்வர் எப்படி தேர்தல் நேரத்திலே மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று 100 நாட்களுக்குள் நிறைவேற்றி தந்தார்களோ அதைப்போல் அதே வழியிலே தொடர்ந்து மக்களிடம் பெறப்படக்கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆட்சி நடைபெறுகிறது. அமைச்சர் அவர்களும், இங்கு இருக்கக்கூடிய நாங்களும் எந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு விரைவிலே நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அந்த கோரிக்கைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு விரைவிலே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியே ஒரு சாட்சியாக இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையால் 35 பயனாளிகளுக்கு ரூ.18 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, 48 பயனாளிகளுக்கு ரூ.26.40 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, 12 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, 31 பயனாளிகளுக்கு ரூ.31000 மதிப்பில் சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை என மொத்தம் 131 பயனாளிகளுக்கு ரூ.44.71 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. உங்களுடைய கோரிக்கைகள், உங்களுடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் உங்களோடு நின்று பணியாற்ற நாங்கள் எப்போதும் இருப்போம் என்ற இந்த மகிழ்ச்சியான தருணத்திலே உங்களை எல்லாம் சந்தித்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து இடைசெவல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பயின்ற கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.25 இலட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா, வட்டாட்சியர் சுப்புலட்சுமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், இடைசெவல் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி, முன்னாள் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.