» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் உரங்கள் ஏற்றுமதி : மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஆய்வு
சனி 2, ஜூலை 2022 8:46:58 PM (IST)
தூத்துக்குடி ஸ்பிக் உர நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் உரங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் டெல்டா மாவட்டங்களில் நடப்பு 2022 ஆண்டிற்கான குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விலையில்லா விதை, உரம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம், டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான உரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்பிக் நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டு வருகிறது.
மேற்படி, உரங்களை அனுப்பும் பணியினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஸ்பிக் நிறுவன நிர்வாகிகள் குறுவை சாகுபடிக்கு வழங்க வேண்டிய நிலுவையிலுள்ள 5000 மெ. டன். யூரியா மற்றும் 3000 மெ. டன். டி.ஏ.பி., உரங்களை ஜூலை மாத முதல் வாரத்திற்குள் வழங்கிட உறுதியளித்தார்கள். டெல்டா மாவட்ட மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அதிக படியான உரங்களை உடனடியாக வழங்கிட மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் மற்றும் வாழை பயிர்களுக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக ஸ்பிக் நிறுவன கூட்டரங்கில் தமிழகம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தயாரிக்கப்படும் உரங்களின் அளவு, தரம், ஏற்றுமதி செய்யப்படும் விதம் ஆகியவற்றை குறித்து பொது மேலாளர் செந்தில்நாயகம், தலைமை விற்பனை அலுவலர் அடக்கலம், சந்தைப்படுத்தும் அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு உரம் தயாரிக்கப்படுவதையும் அவற்றினை பொட்டலமிட்டு விநியோகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) சொ.பழனிவேலயுதம், கோட்டாட்சியர் மற்றும் வட்டாச்சியர் தூத்துக்குடி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) செ.கண்ணன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) செல்வி.ஆ.கார்த்திகா, ஸ்பிக் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அம்ரிதாகௌரி, நிர்வாகிகள், வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.