» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து மே 26ல் ஆர்ப்பாட்டம்: கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலோசனை!
வெள்ளி 20, மே 2022 4:03:28 PM (IST)
தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வருகிற 26ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளன. இதனால் காய்கறி, உணவு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வுகளை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலை கடைகளில் வழங்கிட வேண்டும். அரசுத் துறையில் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் மே 26ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மாநிலக்குழு உறுப்பினர் ஞான சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் இக்பால், தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சிபிஐ(எம்), சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் 2022 மே 26 அன்று தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் சிபிஐ மாவட்ட செயலாளர் கரும்பன் தலைமையிலும், கோவில்பட்டியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையிலும், திருச்செந்தூரில் விசிக தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையிலும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.