» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குமரி மாவட்டத்தில் 128 மையங்களில் 37,418 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகிறார்கள் : ஆட்சியர் தகவல்!
புதன் 18, மே 2022 5:21:50 PM (IST)
குமரி மாவட்டத்தில் வருகிற 21ம் தேதி 128 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெறுகிறது. 37,418 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், அனைத்து வட்டங்களுக்குட்பட்ட பள்ளி/கல்லூரிகளில் வைத்து 21.05.2022 (சனிக் கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (நேர்முகத்தேர்வு பதவிகள் (ம) நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி II & IIA) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வானது மாவட்ட முழுவதும் 128 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் 37,418 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர். மேற்படி தேர்வுக்காக 10 பறக்கும் படைகள், 30 இயக்க ஊர்திகள் (Mobile Unit) மற்றும் 128 ஆய்வு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 128 மையங்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வுக் கூடங்களில் 128 வீடியோகிராபர்கள் மூலம் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். காலை 8.59 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அனுமதிக்கும் உபகரணங்கள் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.04652-231077-இல் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.