» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விரைவில் ஐடி பார்க்: கனிமொழி எம்பி தகவல்
செவ்வாய் 17, மே 2022 3:41:09 PM (IST)
தூத்துக்குடியில் விரைவில் ஐடி பார்க் வர உள்ளதாக அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் கனிமொழி எம்பி பேசினார்.
தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 2022 - 2024 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா எட்டையபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
பின்னர் தொழிற்சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு, பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து, பொருளாளர் ஜே.சேசையா வில்லவராயர், துணைத் தலைவர்கள் பிரேம் வெற்றி, டி.ஆர்.பாலமுருகன், எஸ்.சுரேஷ்குமார், இணைச் செயலாளர்கள் விவேகம் ஜி.ரமேஷ், எஸ்.ராஜேஷ் பால சந்திரன், எஸ்.நார்டன், நிர்வாக செயலாளர் பிரேம் பால் நாயகம் ஆகியோருக்கு கனிமொழி எம்பி பதவி பிரமானம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இன்று தொழில் வளர்ச்சிக்கு ஏதுவான ஆட்சி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருக்க கூடிய முதலீட்டாளர்கள் கலைஞர் ஆட்சியில் எப்படி தமிழகத்தில் முதலீடு செய்தார்களோ அதே போன்று இன்றும் பலர் தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வருகின்றனர். தூத்துக்குடியில் அதிகப்படியான முதலீட்டாளர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விரைவில் ஐடி பார்க் வருகிறது. விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. துறைமுக விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் - மீளவிட்டான் மேம்பால பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடைந்து விடும் என்றார்.
விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொது மேலாளர்கள் சூரியராஜ், ஆறுமுக பாண்டியன், மண்டல மேலாளர் சுரேந்திர குமார், ஸ்பிக் முழு நேர இயக்குனர் எஸ்.ஆர்.ராம கிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அம்ரிதா கௌரி, டிசிடபிள்யு மூத்த செயல் தலைவர் சீனிவாசன், இந்தியன் வெண்ணிலா குழும தலைமை செயல் அதிகாரி மகேந்திரன், அகில இந்திய தொழிற்சங்கத்தின் முன்னாள் மூத்த தலைவர் ஏ.வி.எம் மணி, தொழிலதிபர்கள் ஜோ.வில்லவராயர், டி.உதயசங்கர், டி.வேல் சங்கர், பழரசம் விநாயக மூர்த்தி, பாஸ்கரன், செந்தில் ஆறுமுகம், சுப்புராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.