» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீடு இடிந்து 2பேர் பலி : அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் - ரூ.2லட்சம் நிதியுதவி வழங்கல்!!
செவ்வாய் 3, மே 2022 3:18:15 PM (IST)
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மரணம் அடைந்தவர்களின் வீட்டிற்கு சென்று அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி அண்ணாநகர் 3வது தெருவில் வசித்து வருபவர் முத்துராமன். முத்துராமன் காய்கறி மார்கெட்டில் உள்ள கழிப்பறையில் கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி காளியம்மாள். இவர்களது மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா. காத்தம்மாள் என்ற கார்த்திகாவுக்கும் மார்த்தாண்டம் பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கடந்த 10 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 9 மாத கர்ப்பிணியான கார்த்திகாவுக்கு வளைகாப்பு நடத்தி தூத்துக்குடி அண்ணாநகர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இவர்கள் வசிக்கும் வீடு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வீட்டின் மேற்கூரை மிகவும் பழுதடைந்ததால் தெர்மோகோல் சீலிங் அமைத்துள்ளனர். இதனால் கூரை மேலும் மோசமானது. வீட்டில் உள்ளவர்கள் கவனிக்கவில்லை. சீலிங்கில் மேற்கூரை காங்கிரிட் உதிர்ந்து விழுந்ததை எலி ஓடுவதாக நினைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை இவர்கள் வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது அதிகாலை 4 மணியளவில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி தாய் மற்றும் கர்ப்பிணி மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
வீட்டின் ஒரு ஓரத்தில் படுத்திருந்த முத்துராமன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிலையில் இந்த வேலைக்காக வழக்கமாக 3 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக முத்துராமன் செல்வது வழக்கம். அதிகாலையில் வேலைக்கு செல்ல எழுந்து வரும் முத்துராமன் இன்று 4 மணியாகியும் கதவு திறக்காததால் அவரது தாயார் சென்று பார்க்கும்போது முத்துராமனின் மகள் மற்றும் மனைவி வீடு இடிந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பதையும், தனது மகன் காயங்களுடன் இருப்பதையும் கண்டு அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
அதனடிப்படையில் அவர்களை மீட்டு அரசு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முத்துராமனுக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்துராமனின் மனைவி, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையறிந்த சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு இடிபாடுகள் குறித்து கேட்டறிந்து முத்துராமனின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முத்துராமனை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.2லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சிவ சுப்பிரமணியன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணிவட்டாட்சியர் செல்வக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.