» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குளியறையில் டம்மி கேமராக்கள்: யாரும் அச்சப்பட தேவையில்லை - நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு!
வெள்ளி 21, ஜனவரி 2022 3:08:12 PM (IST)
விளாத்திகுளம் அருகே பெண்கள் குளியறையில் 3 கேமராக்கள் பொருத்தியது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தவநாயக்கன்பட்டியில் காமாட்சியம்மன் கோவிலில் பெண்கள் கழிப்பறை மற்றும் குளியறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று மேற்படி இடத்தை ஆய்வு செய்ததில் 3 கேமராக்கள் இருப்பதை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
அந்த கேமராக்களை ஆய்வு செய்தததில் எவ்வித பதிவுகளும் இல்லை, மேலும் அந்த கேமராக்கள் வயர் இணைப்புகள் எதுவும் கொடுக்காமல் டம்மியாக வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை இருப்பினும் இது குறித்து மேற்படி கோவில் பூசாரி முருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் விளாத்திக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் கண்டு பிடிக்கப்பட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்டம் (பொறுப்பு) திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.