» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக் கொலை..? 4 நாட்களுக்குப் பின் உடல் மீட்பு

புதன் 8, டிசம்பர் 2021 9:13:40 PM (IST)

தென்காசியில் விளாத்திக்குளம் வாலிபர் கொலை செய்யப்பட்டு கல்குவாரியில் வீசப்பட்ட நிலையில் 4 நாட்களுக்குப் பின்னர் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகேயுள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் அரவிந்த் (26). டிரைவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த மாலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பின்னர் விளாத்திக்குளம் அருகேயுள்ள பெருநாழி விலக்கு பகுதியில் அரவிந்த் வசித்து வந்தார். மாலாவின் தந்தை ராஜேந்திரன் சிற்ப வேலை செய்து வருகிறார். 

இவரது சொந்த ஊர் தென்காசி அருகேயுள்ள பாட்டாக்குறிச்சி கிராமம் ஆகும். இந்நிலையில் அரவிந்திற்கு டிரைவர் வேலை வாங்கித்தருவதாக கூறி அவரை மாலாவின் உறவினர் ஒருவர் தென்காசிக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் அரவிந்த் வீடு திரும்பவில்லை அவர் என்ன ஆனார் என்றும் தெரியவில்லை.இதனால்்அரவிந்த் மனைவி மாலா தனது கணவர் அரவிந்தை காணவில்லை என்று கடந்த 5ம் தேதி தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அரவிந்த் கொலை செய்யப்பட்டு உடல் பாட்டாக்குறிச்சி அருகேயுள்ள கல்குவாரியில் வீசப்பட்டது என்பது தெரியவந்தது. .இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மாதவன், தென்காசி காவல்உதவி ஆய்வாளர் கற்பகராஜ், தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் அரவிந்த் உடலை தேடி மீட்பதற்கு தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ரமேஷ் போக்குவரத்து அலுவலர் சுந்தரம், சிறப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராமசாமி, ஆறுமுகம், சுந்தர் ஆகியோர் விரைந்து சென்று கல்குவாரி குட்டையில் இருந்து அரவிந்த் உடலை மீட்டனர். கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி, உதவிஅலுவலர் இசக்கியம்மாள்ஆகியோர் முன்னிலையில் அரவிந்த் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த்தை தொலை செய்த கீழப்புலியூரைச் சேர்ந்த சீதாராமன், பொன்னரசு, தம்பிரான் (எ) பத்து இட்லி அருணாசலம், வேட்டைக்காரன்குளம் மணிகண்டன் ஆகிய 4 பேர்களை கைது செய்தனர். அரவிந்த் கடந்த 4ம் தேதி தென்காசியில் உள்ள தனியார் லாட்ஜில் கொலை செய்து உடலை கல்குவாரியில் வீசியதாக கைதானவர்கள் கூறியுள்ளனர். அரவிந்த் ஆணவக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory