» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூக வலைதளங்களில் பரவிய நாயை அடித்துக் கொல்லும் காட்சிகள் : 2பேர் கைது!
ஞாயிறு 5, டிசம்பர் 2021 8:21:38 PM (IST)
பேய்க்குளத்தில் நாயை அடித்துக் கொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையொட்டி எஸ்பி உத்தரவின் பேரில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் மனிதாபிமானம் இல்லாமல் 3 பேர் சேர்ந்து ஒரு தெரு நாயை கம்பால் தாக்கி, இறந்து போகும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருவதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், வீடியோவில் நாயை அடித்து கொன்ற 3 எதிரிகளை கண்டுபிடித்து உடனே கைது செய்யுமாறு சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜூக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர அருள் சாம்ராஜ் மற்றும் காவலர் பாண்டியராஜன் ஆகியோர் வீடியோ பதிவு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் வடக்குத் தெருவைச்சேர்ந்த இ. சுந்தரம் (எ) தாஸ்க்கு (30), சொந்தமான ஆடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தெரு நாய் கடித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம் (எ) தாஸ், அவரது நண்பர்களான சு. இசக்கிமுத்து (எ) கோட்டை (37), அதே பகுதியை சேர்ந்த ப. குமார் (32) ஆகிய 3 பேரும் சேர்ந்து சனிக்கிழமை பேய்க்குளம் முசலைக்குளம் பகுதியில் வைத்து தெரு நாயை கம்பு மற்றும் கல்லால் தாக்கி கொன்றது தெரியவந்தது. இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரம் (எ) தாஸ், இசக்கிமுத்து (எ) கோட்டை ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.