» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மக்கள் முன்னோடி : பிரதமர் மோடி பாராட்டு
ஞாயிறு 28, நவம்பர் 2021 2:43:06 PM (IST)
இயற்கையைப் பாதுகாப்பதில் தூத்துக்குடி மக்கள் முன்னோடியாக இருக்கிறார்கள் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பப்பட்டது.
அதில் பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: இந்த நாளில் நாட்டின் ஆயுதப் படையினரை நினைவு கூறுவதோடு நெஞ்சுரம் கொண்டவர்களையும் நினைவு கூர்கிறோம். நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பாதுகாப்போம் அதன் பிரதிபலனாக இயற்கை நம்மை பாதுகாக்கும். உத்தர பிரதேசத்தின் ஜலான் என்ற இடத்தில் நூன் என அழைக்கப்படும் ஆறு இருந்தது. படிப்படியாக இந்த ஆறு அழிவின் விளிம்புக்கு சென்றது. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஜலான் மக்கள் நடப்பு ஆண்டு குழு ஒன்றை அமைத்து நதிக்கு புத்துயிர் அளித்தனர்.
நாம் இயற்கையை பாதுகாக்கும் போது அது நம்மை பாதுகாக்கும். தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தூத்துக்குடியில் சிறிய தீவுகள், திட்டுகள், கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை நடுகிறார்கள். புயல், சூறாவளியிலும் நிமிர்ந்து நின்று நிலத்திற்கு பாதுகாப்பாக இருக்கின்றன பனைமரங்கள். நாம் இயற்கையை பாதுகாக்கும் போது இயற்கையும் நம்மை பாதுகாக்கும்; இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டை தமிழ்நாட்டு மக்கள் பரந்துபட்ட அளவிலேயே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினர்.
kumarNov 28, 2021 - 07:46:31 PM | Posted IP 173.2*****