» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு : தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
புதன் 27, அக்டோபர் 2021 7:40:37 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய காலத்திற்குள் நிலுவையின்றி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு தூத்துக்குடி மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் விதமாக மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாநகராட்சி பொது நிதியிலிருந்து மாநகரப் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகள் பொதுமக்கள் நலன் கருதி அவ்வப்போது நடைபெற்று வருகிறது மேற்படி அவசரகால அந்தியாவசிய தேவைகளுக்காக பெருமளவிலான தொகை செலவிடப்பட்டு வருகிறது.
பொது மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொய்வின்றி நிறைவேற்றுவதற்கு மாநகராட்சியின் நிதி ஆதாரம் இன்றியமையாததாகும் இந்நிலையில் மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாய்கள் பொதுமக்களிடமிருந்து உரிய காலத்திற்குள் வரப்பெற்றால்தான் பணிகளை திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த இயலும். எனவே பொதுமக்கள் மாநகரத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் உரிய காலத்தில் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏதுவாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி குடிநீர் கட்டணம், உரிமையாணை கட்டணம் கடை வாடகை தொழில் வரி மற்றும் இதர வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான தொகைகளை உரிய காலத்திற்குள் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்களில் செலுத்த தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களின் வாயிலாக பெறப்பட வேண்டிய தொகைகள் அக்டோபர் 2021 மாதம் வரை 30 சதவீதம் அளவிலான தொகைகள் மட்டுமே வருலாகியுள்ளது. குறிப்பாக மாநகராட்சியின் ஒரு சில பகுதிகளில் (கதிர்வேல் நகர். பி அண் டி காலனி, பாளை ரோடு மேற்கு, டுவிபுரம் 1வது தெரு டூவிபுரம் 2வது தெரு பாளை ரோடு, சங்கர் காலனி. சுப்பையாபுரம் 1வது தெரு மெயின் போல்டன்புரம் 1வது நெரு மெயின், முனியசாமிபுரம் மேற்கு, பிரையண்ட் நகர் 12வது தெரு பண்டாரம்பட்டி, ராஜகோபால் நகர், ராஜிவ் நகர், மீளவிட்டான்,
போல்பேட்டை ஹவுசிங் போர்டு கேடிசி நகர், முத்தம்மாள் காலனி போல்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் 6வது தெரு, முத்துகிருஷ்ணாபுரம் 7வது தெரு மெயின், பூபாலராயர்புரம், திரேஸ்பரம் பீச்ரோடு, தட்டார் தெரு, தட்டார் தெரு தொடர்ச்சி, குரூஸ்புரம், நாராயணன் தெரு மறக்குடித் தெரு சென்ட் பீட்டர் கோயில் தெரு, பிரமுத்து சந்து, தெற்கு காட்டன் ரோடு. மேலூர் பங்களா தெரு, குமாரர் தெரு, சிவந்தகுளம் ரோடு, ரோச் காலனி (ஜார்ஜ் ரோடு பகுதிகள்) இருந்து மிகவும் குறைவான அளவிலேயே வசூலாகியுள்ளது. மேலும் மாநகராட்சிக்கு வரவேண்டிய தொகையானது பெருமளவில் நிலுவையாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக மாநகராட்சி மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை திட்டமிட இயலாத கடினமான சூழல் எழுந்துள்ளது. குறிப்பாக இயற்கை பேரிடர் காலங்களான கொரோனா, டெங்கு போன்ற தொற்று நோய் பரவல் மற்றும் மழை வெள்ள காலங்களில் நிறைவேற்ற வேண்டிய அத்தியாவசியப் பணிகளை போர்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டியதுள்ளதால் மாநகராட்சியில் போதிய நிதி இருப்பில் இருப்பது அவசியமானதாகும். எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகைகளை உரிய காலத்திற்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டியது இன்றியமையாததாகும். இவ்வாறான நிலையில் மாநகராட்சியின் அனுமதி இன்றி முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுக்கப்பட்டதன் காரணமாக பெருமளவில் நிதி இழப்பு ஏற்பட்டு வருவது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இது போன்ற குறைபாடுகளை களையும் விதமாக வரி மற்றும் வரி இல்லா இனங்களில் நிலுவை வைத்துள்ள கட்டிடங்கள் மற்றும் மாநகராட்சியின் அனுமதியின்றி எடுக்கப்பட்டு வரன்முறை படுத்தப்படாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் பெருவாரியாக நிலுவை வைத்துள்ள பகுதிகளுக்கான குடிநீர் விநியோக சேவையினையும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சியின் கடுமையான நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகைகளை உடனடியாக செலுத்தி மாநகராட்சி மூலம் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.