» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி உப்பாற்று ஓடை பைபாஸ் சந்திப்பில் மேம்பாலம் பணி தீவிரம்
திங்கள் 25, அக்டோபர் 2021 8:42:35 AM (IST)
தூத்துக்குடி உப்பாற்று ஓடை பைபாஸ் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு, உப்பாற்று ஓடை அருகிலுள்ள பைபாஸ் சந்திப்பில் இதுவரை ஏராளமான விபத்துகள் நடந்துள்ளன. இந்த இடத்தில் நடைபெற்ற விபத்துகளால் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த இடத்தில் மேம்பாலம் கட்டும் பணியை விரைவு படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மேம்பாலம் கட்டும் பணி தற்போது துவங்கியுள்ளது. இதையொட்டி அப்பகுதியில் வாகனங்கள் நேரடியாக செல்ல முடியாத படி, தற்போது பைபாஸ் சந்திப்பின் நடுப்பகுதி சாக்கு மூடைகளால் அடைக்கப்பட்டு விட்டது. இதனால், முத்தையாபுரத்தில் இருந்து தூத்துக்குடி நகர உள்பகுதிக்கு செல்வோரும், தூத்துக்குடி நகர உள்பகுதியில் இருந்து முத்தையாபுரம் வழியே செல்வோரும், இந்த சந்திப்பில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு இடது புறம் சுற்றி செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
உப்பாற்று ஓடை அருகிலுள்ள இந்த பைபாஸ் சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென 20 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்து வந்த, தூத்துக்குடியை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் எம்.சொக்கலிங்கம் இது குறித்து கூறுகையில், மதுரை - தூத்துக்குடி துறைமுகம் பையாஸ் ரோட்டில், தூத்துக்குடி - "பாளையங்கோட்டை ரோடு சந்திக்கும் இடத்திலும், தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு சந்திக்கும் இடத்திலுமாக 2 மேம்பாலங்களை அமைக்க பல வருடங்களாக வலியுறுத்தி வந்தேன்.
அதற்கு, அரசு சார்பில் வந்த பதிலில், பாளையங்கோட்டை ரோடு சந்திக்கும் இடத்தில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றும், திருச்செந்தூர் ரோடு சந்திக்கும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது. அதுபோல பாளையங்கோட்டை ரோடு சந்திக்கும் இடத்தில் மட்டுமே மேம்பாலம் அமைக்கப்பட்டது. அன்றைக்கே திருச்செந்தூர் ரோடு சந்திக்கும் இடத்திலும் மேம்பாலம் அமைத்திருந்தால், பல உயிர்களை இழந்திருக்க வேண்டாம். மேலும் தற்போது பாலம் வேலை முடியும் வரையிலும், அருகே 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.