» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலை தடுப்பு சுவரில் கார் மோதி 2 பேர் பலி: 6பேர் படுகாயம்
ஞாயிறு 1, ஆகஸ்ட் 2021 10:36:36 PM (IST)
கயத்தாறு அருகே நாற்கரசாலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.. மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு வீதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய மகன் அரிகிருஷ்ணன் (29). இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டார். அப்போது அவர், தன்னுடைய நண்பரான காரைக்குடி கோட்டையூரைச் சேர்ந்த விக்கியையும் (28) அழைத்து சென்றார். இன்று காலையில் அவர்கள் திருச்செந்தூருக்கு சென்றனர். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதயடுத்து அவர்கள் அங்கிருந்து காரில் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு, பின்னர் மாலையில் காரைக்குடிக்கு புறப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் துறையூர் கீரணிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் (25) காரை ஓட்டினார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசன்குளம் நாற்கரசாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த விக்கி மற்றும் அரிகிருஷ்ணனின் தாத்தா கணபதி (88) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அரிகிருஷ்ணன், அவருடைய மனைவி திவ்யபாரதி (27), மகள் கிருபாளினி (2), அரிகிருஷ்ணனின் தாயார் சீதா (53), உறவினரான காளியம்மாள், டிரைவர் வெங்கடேசன் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.