» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சொத்து பிரச்சனையில் தாயை தாக்கிய மகன் உள்பட 3பேர் மீது வழக்கு
சனி 31, ஜூலை 2021 10:29:11 AM (IST)
சாத்தான்குளம் அருகே சொத்து பிரச்சனையில் தாயை தாக்கிய மகன் உள்ளிட்ட 3பேர் மீது போலீஸார் வழக்குபதிந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள மீரான்குளத்தைச் சேர்ந்தவர் யோசேப் மனைவி பரிபூரணம் (70). இவருக்கு சொந்த சொத்தை பிரித்து மகன் குடும்பத்துக்கு கொடுக்க முடிவு செய்து மகன் அகஸ்டின் இறந்து போனதால் அவரது பேரன் யோபுராஜிக்கு கொடுக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மருமகளும், யோபுராஜின் தாயாருமான அருள்செல்வி, அவரிடம் சொத்தை தனது பெயரில் எழுதி தருமாறு கேட்டுள்ளார்.
இதற்கு யோபுராஜ் எதிர்ப்பு தெரிவிதனால் அருள்செல்விக்கும், யோபுராஜிக்கும் பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில் இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் யோபுராஜ், பரிபூரணம், மற்றும் உறவினர் ஈஸ்டர்ராணி ஆகியோர் அருள்செல்வியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அருள்செல்வி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அருள்செல்வி அளித்த புகாரின் பேரில் அவரது மகன் யோபுராஜ், மாமியார் பரிபூரணம் மற்றும் ஈஸ்டர்ராணி ஆகியோர் மீது சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜாண்சன் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.