» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபர் தலை துண்டித்து கொடூர கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!!
வெள்ளி 30, ஜூலை 2021 10:21:47 AM (IST)
கோவில்பட்டியில் வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் பொய்யாழி மகன் மதன்குமார் (21). பெயிண்டர். மேலும் அவ்வப்போது சமையல் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை மதன்குமார், டீக்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மந்தித்தோப்பு தனியார் குடிநீர் நிறுவனம் அருகே உள்ள பகுதியில் மதன்குமார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து மேற்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை டிஎஸ்பி உதயசூரியன் பார்வையிட்டார். பெண் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் குருசந்திர வடிவேல், சுகுமார் மற்றும் தலைமை காவலர் உலகநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கொலையாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.