» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களின் பட்டியலை வெளியிட கோரிக்கை!
வியாழன் 29, ஜூலை 2021 12:27:26 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் அதிக தொகை பாக்கி வைத்துள்ள முதல் 50 நபர்கள் / நிறுவனங்களின் பெயர்களை பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என மதிகமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ் அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில், வரிசெலுத்த வேண்டியவர்களில் பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் பெரிய தொகையை பாக்கி வைத்துள்ளார்கள். இதனால் மாநகராட்சிக்கு பல லடசக்கணக்கான ரூபாய்கள் பொது மக்கள் மற்றும் பல நிறுவனங்களில் இருந்து வர வேண்டியுள்ளது.
பொது மக்கள் உரிய காலங்களில் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை மாநகராட்சிக்கு செலுத்தாமல் பாக்கிவைப்பதால் மாநகராட்சிப் பணிகள், வளர்ச்சிப் பணிகள், சாலைப் பணிகள் ஆகியவை உரிய நேரங்களில் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு பொதுமக்களும், பல்வேறு நிறுவனங்களும் பல வருடங்களாக வரி செலுத்தாமல் பல லட்சம் கணக்கான ரூபாய்களை வேண்டுமென்றே பாக்கிவைத்துள்ளனர். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் மிக கண்டிப்பான உரிய வழிகளில் வரிவசூல் நடவடிக்கைகள் எடுக்காததே காரணமா என ஏழை எளிய மக்கள் கருதுகிறார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல், மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு தடையாக இருந்து வரும், அதிகமான தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள முதல் 50 நபர்களின் / நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல்களையும், அவர்கள் பாக்கி வைத்துள்ள தொகைகளையும் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு டிஜிடல் போர்டு வைத்து தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இது போல் பாக்கி வைத்தவர்களின் பெயர்கள் தொகைகள் குறித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு பொது மக்கள் பார்வைக்கு டிஜிடல் போர்டு வைக்கப்பட்டது. அப்போது பல லட்சக்கணக்கான ரூபாய்களை பலபேர் உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்தினார்கள்.
எனவே அது போன்று இதுவரை மாநகராட்சிக்கு அதிகமான தொகை பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களையும், பாக்கி தொகைகளையும் பொது மக்களின் பார்வைக்கு வருகின்ற ஆகஸ்ட் 3ந் தேதியன்றே டிஜிடல் போர்டு வைத்து தெரிவிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் அதிக தொகை பாக்கி வைப்பவர்கள். மாநகராட்சியின் வளர்ச்சிக்கும், மக்கள் பணிகளுக்கும் தடையாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது உடனடியாக உரிய சட்டங்களை பயன்படுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பாக்கி தொகைகளை வசூல் செய்து வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.