» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆபத்தான மின்கம்பங்கள் சீரமைப்பு: பொதுமக்கள் கோரிக்கை ஏற்பு
புதன் 28, ஜூலை 2021 10:24:00 PM (IST)
தூத்துக்குடி அருகே சேர்வைக்காரன்மடத்தில் ஆபத்தான மின்கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி, சக்கம்மாள்புரம் குளத்தங்கரையில் ஆபத்தானநிலையில் இரட்டைப்போல் மின்கம்பம் இருந்துவந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக அப்பகுதி வார்டு உறுப்பினர் குணபாலண், சமூக ஆர்வலர் ஜெபஸ்டின் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகையா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற சமூக ஆர்வலர் ஜெபஸ்டின் மீண்டும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து கம்பத்தை உடனடியாக மாற்ற சம்பந்தபட்ட அதிகாரியிடம் வலியுறுத்தினார். அதன் பேரில் மின்கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டது.