» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பூர்வீக சொத்து முறைகேடாக பத்திரப்பதிவு : தாய், மகள் போராட்டம்!
புதன் 28, ஜூலை 2021 8:35:27 AM (IST)
கயத்தாறில் தங்களுக்கு சொந்தமான பூர்வீக வீடு, நிலத்தை முறைகேடாக வேறு நபருக்கு பத்திரப்பதிவு செய்ததாக கூறி சார்பதிவாளர் அலுவலகத்தில் தாய்-மகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகள் சுப்புலட்சுமி. இவர் தனது தாயார் கருப்பாயியுடன் நேற்று கயத்தாறு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர்கள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சுப்புலட்சுமி கூறியதாவது: எனது தந்தையை பிரிந்து நானும், தாயும் உறவினர் வீட்டில் வசிக்கிறோம். எனது தந்தை எங்களுக்கு சொந்தமான 2 வீடுகள் மற்றும் பூர்வீக இடத்தையும் வேறு நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக அறிந்து, அவற்றை வேறுநபருக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று மனு கொடுத்தோம்.
அப்போது சார்பதிவாளர், பத்திரப்பதிவு செய்ய மாட்டோம் எனக்கூறினார். இந்த நிலையில், இன்று (நேற்று) வந்து கேட்டபோது, பத்திரப்பதிவு ஆகிவிட்டது என்று கூறி விட்டார். மேலும் 11 சென்ட் இடத்தில் 2 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை கூட காட்டாமல் காலிமனை என பத்திரப்பதிவு செய்துள்ளனர். எனவே, முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பத்திரப்பதிவை ரத்து செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் தாய், மகள் இருவரும் கயத்தாறு காவல் நிலையத்துக்கு சென்று சார்பதிவாளர் மீது புகார் செய்தனர்.இந்த சம்பவம் கயத்தாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.