» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நிகோட்டின் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை!
செவ்வாய் 27, ஜூலை 2021 9:37:06 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வணிகர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் வணிகத்தை நிறுத்தும் அளவிற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : புகையிலை மற்றும்; நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்கம் பொதுமக்களிடையே ஏற்படுகின்றன. அவ்வாறான நோய்களின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்திட தமிழகத்தில் புகையிலை மற்றும்; நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது, போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில வணிகர்கள் வெளி மாநிலங்களிலிருந்து கடத்திவரப்படும் புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை கள்ளச்சந்தையில் நமது மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர்.
இப்பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பலதுறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.மு.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஆட்சித் தலைவர் அவர்கள் பின்வரும் சில அறிவுரைகளை வழங்கினார். உணவு வணிகர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும்; நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யும் போது, வணிகரிடத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் உணவு மாதிரி எடுக்க தேவையான 2 கிலோ அளவைவிடக் குறைவாகக் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
திரும்ப குற்றமிழைக்கும் வணிகர்களுக்கு இரட்டிப்பு அபராதமும், மீண்டும் அதே வணிகர் குற்றமிழைத்தால் ரூ.25,0000 அபராதம் விதிக்கப்படுவதுடன் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு கடை மூடப்படும். ஆனால், ஏதேனும் ஒரு வணிகரிடத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் உணவு மாதிரி எடுக்க தேவையான 2 கிலோ அளவிற்கு மேல் கண்டறியப்பட்டால், உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்து, பகுப்பாய்வறிக்கையின் அடிப்படையில் குற்றவியல் நீதிமன்றத்தில், பிரிவு 59, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
இப்பிரிவின் கீழ் குற்றமிழைக்கும் வணிகர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. உணவு வணிகரிடத்திலும், உணவு வணிகரல்லாத இதர வணிகரிடத்திலும் காவல் துறை, உணவு பாதுகாப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வணிகவரித் துறையின் மூலம் தனிப்பட்ட ஆய்வு அல்லது கூட்டாய்வு செய்யப்படும். அவ்வாய்வின் போது, தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும்; நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், காவல் துறை அல்லது உணவு பாதுகாப்புத் துறை மூலம் தொடர் சட்;ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களின் பொதுசுகாதார நலனிற்கு ஊறுவிளைவிக்கும் இத்தகையை தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும்; நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களின் வணிகத்தில் ஈடுபடாமல், வணிகர்கள் தத்தமது வணிகத்தை பாதுகாத்து தொழிலில் வளர்ச்சியடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும், பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும்; நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகார் அளிக்க விரும்பினால் 9444042322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும், அவ்வாறு புகார் அளிக்கும் நுகர்வோர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.