» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு : அண்ணன் - தம்பி உட்பட 3பேர் கைது!!
சனி 12, ஜூன் 2021 4:27:44 PM (IST)
தூத்துக்குடியில் முன் விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய அண்ணன் தம்பி உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி வடக்கூர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலன்டைன் பிரகாஷ் மகன் டேரிஸ் காலேப் (21), இவருக்கும் தூத்துக்குடி காந்தி நகர் முதல் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் ராமர் (21) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் டேரிஸ் காலேப், காசுக்கடை பஜார் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு பைக்கில் வந்த ராமர், அவரது தம்பி லட்சுமணன் (20), மற்றும் நண்பர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் சந்தனராஜ் (20) ஆகிய 3பேரும் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த டேரிஸ் காலேப், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ராமர் உட்பட மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.