» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது!
சனி 12, ஜூன் 2021 3:56:16 PM (IST)
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 26.03.2021 அன்று, தாய், தந்தை வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியிடம் தூத்துக்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார் (28) என்பவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து மேற்படி சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து எதிரி சதீஷ்குமாரை தேடி வந்தனர்.*
இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் தலைமைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று பழைய பேரூந்து நிலையம் அருகில் ரோந்து சென்ற போது, போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற சதீஷ்குமாரை கைது செய்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ஜெயந்தி விசாரணை மேற்கொண்டு எதிரி சதீஷ்குமாரை தூத்துக்குடி போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தார்.