» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைனான்சியர் கொலை வழக்கில் தந்தை, மகன் உட்பட 6பேர் கைது: - மேலும் 5பேருக்கு போலீஸ் வலைவீச்சு

வெள்ளி 11, ஜூன் 2021 8:46:58 AM (IST)

சாத்தான்குளத்தில் பைனான்சியரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து மேலும் 5பேரை தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், தைக்கா தெருவைச் சேர்ந்த செல்லப்பா மகன் மார்ட்டின் (45). பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு இவர் தனது வீட்டுக்கு பைக்கில் தைக்கா தெரு பள்ளி வாசல் அருகில் வந்த போது அங்கு மறைந்திருந்த 10 பேர் கும்பலால் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமார், காவல் ஆய்வாளர்கள் பெர்னார்ட் சேவியர், சாம்சன் ஜெபதாஸ், விஜயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மார்ட்டினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவ இடத்தை நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மார்ட்டினின் உறவினர்கள் திரண்டு நிற்கவே, அவர்களை அழைத்து டிஐஜி பிரவீன்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். கொலை எதிரொலியாக சாத்தான்குளத்தில் தைக்கா தெரு உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், மேல சாத்தான்குளம் செந்தில் என்பவருக்கும் மார்ட்டீனுக்கு கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் ஓடைகார தெருவில் மிட்டாய் கடை நடத்தி வந்த பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த மைதீன் மீரான் என்பவரும் மார்ட்டீனிடம் பணம் வாங்கி வட்டியும் அசலும் கொடுக்கவில்லையாம். இதனால் மார்ட்டீன் தொலைபேசியில் கேட்டபோது மீரான் மைதீனுக்கு ஆதரவாக செந்தில் ஏற்பாட்டின்படி முன்னாள் பேருராட்சி மன்ற உறுப்பினர் பாபுசுல்தான் போலீசில் புகார் செய்து வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து பாபுசுல்தான், மீரான் மைதீன் ஆகியோர் மார்ட்டினை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனை முன்விரோதமாக கொண்டு பாபுசுல்தான், மைதீன் மீரான், செந்தில், மகதூன் ஆகியோர் மார்டீனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மார்ட்டீனுக்கு பாதுகாப்பாக அவரது சகோதரர்கள் அவருடன் சென்று வந்துள்ளனர். வியாழக்கிழமை மார்ட்டீன் அவரது பைக்கில் இரவு 7.15மணி அளவில் பைக்கில் தலைவலி மாத்திரை வாங்க பஜாரிக்கு சென்று திரும்பியுள்ளார்.

அங்குள்ள பள்ளி வாசல் அருகில் மார்ட்டீன் வந்தபோது பாபுசுல்தான் , அவரது மகன்கள் பிலால், பாரிஸ், மைதீன் மீரான்,பீர்கான் மகன் புகாரி, சிந்தா மகன் ரசுருதீன், மகதூன் மகன் காதர், அகமது சிந்தா,ஆகியோர் அவரை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மார்ட்டீன் கிழே விழுந்தார். இதையடுத்து அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அப்போது பின்னால் வந்த மார்ட்டீன் சகோதரர் பொன்பாண்டி அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து மார்ட்டீன் சகோரதர் பொன்பாண்டி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின ்பேரில் , பாபுசுல்தான், மைதீன்மீரான், புகாரி, ரசுருதீன், பிலால், பாரிஸ், காதர், சிந்தா,மகதுன், செந்தில், மக்கீர் முகம்மது மகன் அப்துல்சமது (45) ஆகிய 11 பேர் உள்ளிட்ட மீதுஉதவி ஆய்வாளர் முத்துமாரி வழக்குபதிந்தார். காவல் ஆய்வாளர் பெர்னாட்சேவியர் விசாரணை நடத்தினார். 

இதையடுத்து டிஎஸ்பி காட்வீன் தலைமையிலான தனிப்படையினர் சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்த பாபுசுல்தான் (50), அவரது மகன் பாரிஸ் (25) சிந்தா மகன், ரசுருதீன் (29), பீர்கான் மகன் புகாரி (29), அகமது மகன் சிந்தா(27), அப்துல்சமது (45) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். 18 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினர் எஸ்பி. ஜயக்குமார் பாராட்டினார். 

இந்நிலையில் மார்ட்டின் உடல் பிரேத பரிதேனை முடிந்து மதியம் 1மணி அளவில் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே மார்ட்டின் சகோதரர் பொன்பாண்டி, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தார். அதில் பாதிக்கப்பட்ட மாட்டினை மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குழந்தைகள் படிக்க உதவி வழங்கவேண்டும் என வலியுறுத்தினார். அதில் மார்ட்டின் மனைவி நர்சிங் முடித்துள்ளதால் அவருக்கு வேலை வாய்ப்பும், குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory