» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கனிமொழி எம்பி ஆய்வு : கரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரிப்பு
ஞாயிறு 6, ஜூன் 2021 10:32:49 AM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் இன்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை வார்டுக்கு மின்தூக்கி (லிப்ட்) வசதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கனிமொழி எம்பி, பாதுகாப்பு கவச உடை அணிந்து கரோனா வார்டுக்குள் சென்று, சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை நடைபெறுகிறதா என்றும் அவர்களின் உடல்நலம் குறித்தும் நலம் விசாரித்தார். மேலும், கரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசி செலுத்தும் மையத்திலும் ஆய்வுகள் மேற்கொண்டார். கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவ பணியாளர்களை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவா் அளித்த பேட்டி: கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிவைக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழகத்தில் அந்நோய்க்குத் தேவையான மருந்துகளை மத்திய அரசு விரைந்து வழங்கவேண்டும். இதுதொடா்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவு மருந்தே வந்துசேருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமோ, வெளிநாடுகளிலோ இந்த நோய்க்கான மருந்துகளை வாங்கி, மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெகீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் கிசெந்தில்ராஜ், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.