» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் போரில் கைதிகளை ஈடுபடுத்த ரஷியா முடிவு: மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 4:47:09 PM (IST)
உக்ரைனுக்கு எதிரான போரில் சிறைக் கைதிகளை ஈடுபடுத்த ரஷியா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 6 மாதங்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் உதவியுடன் மிகப்பெரிய நாடான ரஷியாவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் போரில் சிறைக் கைதிகளை ஈடுபடுத்த ரஷியா முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக ரஷியாவின் முக்கிய நகரங்களான மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரியாசான், ட்வெர், பிரையன்ஸ்க் ஆகிய பிராந்தியங்களில் ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போரில் ரஷியத் தரப்புக்கும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறும் நிலையில், நிலைமையை சமாளிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. போரிட விரும்பும் சிறைக் கைதிகளை விடுவிப்பதுடன் அவர்களுக்கு மாத ஊதியம் 1,00,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ. 1.32 லட்சம்), போனஸ் மற்றும் மரணம் ஏற்பட்டால் குடும்பத்தினருக்கு உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும் என உறுதியளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ரஷியாவின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.