» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமைதி வழியில் போராட்டங்களில் மக்கள் ஈடுபட வேண்டும்: அதிபர் ரணில் வேண்டுகோள்!
வியாழன் 28, ஜூலை 2022 12:49:38 PM (IST)
இலங்கையில் வன்முறையின்றி அமைதி வழியில் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அந்நாட்டு மக்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சேவை விரட்டியடித்தனர். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அவருக்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்ற மறுநாளே அதிபர் மாளிகை முன்பு இருந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் தங்கி இருந்த கூடாரங்களை போலீசார் அகற்றினர். போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் அமைதியான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நாட்டின் சட்டத்தின்படி அனைவருக்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அதே உரிமை உண்டு. நாட்டின் அமைப்பை மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. அதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் அதிபராக பதவியேற்றுள்ளேன். பொருளாதார சவால்களை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.