» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குரங்கு அம்மை பரவல் ஓர் எச்சரிக்கை மணி: உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

புதன் 27, ஜூலை 2022 11:38:01 AM (IST)

குரங்கு அம்மை பரவல் ஓர் எச்சரிக்கை மணி என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமிய சாமிநாதன் கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கும் மேல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "குரங்கு அம்மை பரவல் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

குரங்கு அம்மையானது குரங்கு அம்மை வைரஸால் உருவாகிறது. இது ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸை ஒத்த பண்புகளைக் கொண்டது. 1979, 1980களுக்குப் பின்னர் பெரியம்மை தடுப்பூசி பரவலாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதுவும் கூட இந்த வைரஸ் இப்போது மீண்டும் உலகில் உலா வர காரணமாகியுள்ளது.

பெரியம்மை தடுப்பூசிகளே குரங்கு அம்மைக்கு எதிராக பாதுகாப்பு நல்கினாலும் கூட குரங்கு அம்மைக்கு என பிரத்யேகமாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நம்மிடம் இப்போதுள்ள பெரியம்மை தடுப்பூசிகள் எல்லாம் இரண்டாம், மூன்றாம் தலைமுறை தடுப்பூசிகள். அவையும் குறிப்பிட்ட அளவிலேயே இருக்கின்றன. அண்மையில் டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நார்டிக் என்ற நிறுவனம் புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. 

ஆனால் அதன் வீரியம் பற்றிய புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அந்தத் தரவுகளை சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பவேரியன் நார்டிக் நிறுவனம் 16 மில்லியன் டோஸ் குரங்கு அம்மை தடுப்பூசியை வைத்துள்ளது. இவ்வேளையில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பாஎக்கிறேன். இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ள ஆயத்தநிலை அவசியம். அதனால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கலாம்.

புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் இதை முன்னெடுத்து செய்யலாம். தொழில்நுட்ப தரவுகளைப் பகிர்ந்தால் வேறு மருந்து நிறுவனங்களையும் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடுத்தலாம். குரங்கு அம்மை கோவிட் புதிய திரிபுகளைவிட ஆபத்தானதாக இருக்குமா என்றால் அதை நேரடியாக ஒப்பிட முடியாது என்றே சொல்லலாம். குரங்கு அம்மை என்பது வேறு வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. அது கரோனா வைரஸ் போல் வேகமாக உருமாறச் செய்யாது.

இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து உலக நாடுகள் உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும். மரபணு பகுப்பாய்வு தரவுகளை உலக நாடுகள் எங்களுக்கு அனுப்ப வேண்டும். குரங்கு அம்மை இன்னொரு பெருந்தொற்றாக உருவாகமல் தடுக்க வேண்டும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory