» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவில் ஒரு வாரத்தில் கரோனாவின் தாக்கம் 18% குறைந்துள்ளது: உலக சுகாதார அமைப்பு
வியாழன் 21, அக்டோபர் 2021 3:34:56 PM (IST)
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கரோனாவின் தாக்கம் 18 சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: உலக அளவில் கரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான காலத்தில் இந்தியாவில் கரோனா தாக்கம் 18 சதவீதம் குறைந்து உள்ளது. இறப்பு விகிதமும் 13 சதவீதம் குறைந்தது.
இந்த கால கட்டத்தில் உலகில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சம் ஆகும். பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரமாக உள்ளது. கடந்த வாரம் போலவே நடப்பு வாரத்திலும் புதிதாக பாதிப்பு, இறப்பு விகிதம் உள்ளது. ஐரோப்பிய நாடுகளை தவிர ஏனைய நாடுகளில் கரோனாவின் பாதிப்பு குறைந்து உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 சதவீதமாக உயர்ந்து உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் 18 சதவீதம், மேற்கு பசிபிக் நாடுகளில் 16 சதவீத அளவில் கரோனா தாக்கம் குறைந்து உள்ளது. இறப்பு விகிதத்தில் ஆப்பிரிக்கா நாடுகளில் 23 சதவீதமும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 19 சதவீதமும், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் 8 சதவீதமும் குறைந்து உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒட்டுமொத்த எண்ணிக்கை 24 கோடியாகவும், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை 49 லட்சமாகவும் உள்ளது. அக்டோபர் 19-ம் தேதி நிலவரப்படி உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் ஆல்பா வகை தொற்று 196 நாடுகளிலும், பீட்டா வகை தொற்று 145 நாடுகளிலும், காமா வகை தொற்று 99 நாடுகளிலும், டெல்டா வகை தொற்று 193 நாடுகளிலும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.