» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டிஜிட்டல் டாலர்களால் உள்ளளூர் நாணயங்களுக்கு ஆபத்து : ரகுராம் ராஜன் எச்சரிக்கை!
வியாழன் 21, அக்டோபர் 2021 12:31:48 PM (IST)
டிஜிட்டல் அமெரிக்க டாலர்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் உள்ளூர் நாணயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றியுள்ள ரகுராம் ராஜன் ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "அமெரிக்க டாலர்களின் மின்னணு வடிவம் எளிதாக பயன்படுத்தக்கூடியவை. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள மக்கள் டாலர்களை தினசரி பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்த இவை ஊக்கம் அளிக்கும். தற்போது, செலவழித்ததற்கான ரசிது தேவைப்படுவதால் இந்த டாலர்களை பயன்படுத்த கடினமாக உள்ளது.
பெரு பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் நம்பிக்கை குறைவான நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்க டாலர்களை பயன்படுத்துவதால் உள்ளூர் நாணயத்தை பயன்படுத்துவது வெகுவாக குறைத்து விடும். அதாவது அந்த நாட்டிலும் இனி, பணத்தை அச்சிடுவதற்கான அரசின் அதிகாரத்தை அது பறித்துவிடும். பொருளாதார வளர்ச்சியை சமாளிக்க இது குறைவான கருவிகளைக் கொண்டுள்ளது" என்றார்.
டிஜிட்டல் நாணயங்கள் குறித்து அமெரிக்காவின் மத்திய வங்கி விரைவில் அறிக்கை வெளியிடவுள்ள நிலையில், ரகுராம் ராஜன் இக்கருத்தை தெரிவித்துள்ளார். டிஜிட்டர் டாலர்களை வெளியிடுவது குறித்து அமெரிக்க மத்திய வங்கி இன்னும் முடிவு எடுக்கவில்லை. அமெரிக்க மத்திய வங்கியின் தலைவரான ஜெரோம் பவல், இதில் பொறுமை காத்துவருகிறார். ஆனால், இதற்கு நேர்மாறாக சீனா, அதன் டிஜிட்டன் நாணயமான யுவானை சோதனைக்கு விட்டுள்ளது. டிஜிட்டன் நாணயம் விவகாரத்தில், அமெரிக்க மத்திய வங்கி எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. மத்திய வங்கியின் செயல்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்த ரகுராம் ராஜன், "தனியார் துறைகளில் புதுமையை புகுத்துவது மத்திய வங்கியின் பணி அல்ல" என்றார்.