» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கனில் இருந்து 12 மணி நேரத்தில் 10,900 பேர் மீட்பு: அமெரிக்கா தகவல்
செவ்வாய் 24, ஆகஸ்ட் 2021 12:50:02 PM (IST)
ஆப்கானிஸ்தானில் இருந்து 12 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். மேலும் தலிபான்கள், அங்கு ஆட்சியமைப்பதற்கான பல்வேறு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரங்களை காலி செய்த பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டினரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து கிழக்கு நேரப்படி நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரையிலான 12 மணி நேரத்தில் 10,900 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் இதுவரை 48,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது. இதனிடையே, ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31க்குள் முழுவதுமாக வெளியேற திட்டமிட்டிருக்கும் நிலையில் இந்த காலக்கெடுவை நீட்டிக்கலாமா என்பது குறித்து அதிபர் ஜோ பைடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.