» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி
ஞாயிறு 22, ஆகஸ்ட் 2021 9:44:43 PM (IST)
ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்து விட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில், அங்கு ஆட்சி அமைக்க தலிபான்கள் மும்முரம் காட்டிவருகின்றனர். இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர். குறிப்பாக, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிவருகிறது. இதனை சமாளிக்க முடியாமல், அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் திணறி வருகின்றன. மக்களை மீட்கும் பணிகள் இந்த மாத இறுதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீட்பு பணிக்கான கால அவகாசத்தை அமெரிக்கா நீட்டித்துள்ளது.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 7 ஆப்கானிஸ்தானியர் பலியாகியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு ஆப்கனியர்களின் குடும்பத்தாரை எண்ணி வருந்துகிறோம்" என்றார்.