» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பெட்டி பெட்டியாக பணத்துடன் தப்பிச் செல்லவில்லை : ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம்

வியாழன் 19, ஆகஸ்ட் 2021 11:31:37 AM (IST)

உயிருக்கு அஞ்சி பெட்டி, பெட்டியாக பணத்துடன் நான் தஜிகிஸ்தானுக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம் அளி்த்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்து வெளிேயறத் தொடங்கியபின், மிகவிரைவாக ஆப்கானை தங்கள் வசம் தலிபான்கள் கொண்டுவந்துள்ளனர். காபூல் நகருக்குள் தலிபான்கள் வந்துவிட்டதை உறுதி செய்த அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளிேயறி தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமல்லாமல் அதிபர் அஷ்ரப் கனி வெளியேறும் போது 4 கார்கள் நிறைய பணத்தை எடுத்துச் சென்றதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தளம் தெரிவித்தது.

இந்நிலையில் முதல்முறையாக அதிபர் அஷ்ரப் கனி ஃபேஸ்புக்கில் வீடியோவில் தன்னுடைய நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: நான் 4 சூட்கேஸ் நிறைய டாலர்கள் அதாவது அரசின் 16.90 கோடி அமெரிக்க டாலர்களுடன் நான் ஹெலிகாப்டரில் தப்பித்துவிட்டதாகக் குற்றச்சாட்டு வெளியானது. அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. நான் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்லும்போது என்னுடன் ஒரு ஜோடி ஆடைகளும், உள்ளாடைகளும், ஒரு செருப்பும் மட்டுமே எடுத்துச் சென்றேன். எனக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவதும் முற்றிலும் பொய்யான தகவல்

நான் தஜிகிஸ்தானில் இல்லை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன்.என்னுடைய அரசியல் வாழ்க்கையையும், என்னுடைய குணத்தையும் அழிப்பதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வருவது தொடர்பாக பேச்சு நடத்திவருகிறேன் விரைவில் நாடு திரும்புவேன். ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அமைதிப் பேச்சு தோல்வியில் முடிந்ததால்தான், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் நான் தொடர்ந்து தங்கியிருந்தால், காபூல் நகரம் சிரியா, ஏமன் போன்று மாறியிருக்கும். நான் தொடர்ந்து அதிபராக இருந்திருந்தால், அப்பாவி மக்கள் என் கண்முன்னே தலிபான்களால் தூக்கில் தொங்கவிடப்பட்டிருப்பார்கள். இது நம்முடைய வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக இருக்கும்.

இதுபோன்று இறப்பதற்கு நான் அஞ்சவில்லை, ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு அவமதிப்பு வருவதை நான் ஏற்கமாட்டேன். ஆப்கானிஸ்தான் ரத்தக்களரியாக மாறுவதைத் தவிர்க்கவே நான் நாட்டைவிட்டு வெளியேறினேன். நாட்டின் அரசியல் நிலையை சீர் செய்ய முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், தலிபான்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவாக இருக்கிறேன். இவ்வாறு அஷ்ரப் கனி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory