» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கரோனா வைரஸ் தொற்று நோய்களுக்கான சிகிச்சை திட்டம்: அமெரிக்கா 320 கோடி டாலர் ஒதுக்கீடு!
சனி 19, ஜூன் 2021 5:08:31 PM (IST)
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கும் உரிய மருந்துகளை கண்டுபிடிக்க 320 கோடி டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பிடேனின் ஆலோசகர் அந்தோணி ஃபாசி அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று நோய்களுக்கான சிகிச்சை திட்டம் ஒன்று அமெரிக்காவில் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அந்தோனி தெரிவித்தார். ஆனால், கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு தடுப்பூசி மருந்து மிக முக்கியமான தடுப்பு முறையாக தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அந்தோணி குறிப்பிட்டார். இந்த தடுப்பூசி மருந்துகளுடன் சேர்ந்து கரோனா வைரஸ் மற்றும் பிற வைரஸ்களுக்கு எதிரான சிகிச்சை முறைகளை உருவாக்க நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
வைரஸ்கள் உருமாற்றம் பெற்று புதிய வைரஸ் இனங்களாக மக்களை மீண்டும் மீண்டும் தாக்குவது குறித்தும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அந்தோணி ஃபாசி கூறினார். தற்பொழுது மருத்துவ உலகுக்கு அறிமுகமான பெருந்தொற்று நோயாக பரவக்கூடிய வைரஸ்கள் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.. எபோலோ வைரஸ் உள்ளிட்ட ஃபைலோ வைரஸ் வகைகள், சிக்குன்குனியா வைரஸ், பாராமிக்ஸிகோ வைரஸ், என்டிரோவைரஸ்கள் உள்ளிட்ட பைகரோனா வைரஸ்கள் வைரஸ் நோய்களுக்கான புதிய சிகிச்சை மருந்துகளை உருவாக்க ஆய்வுகள் முடுக்கி விடப்படும்.
அதேநேரத்தில் சோதனைகள நடத்தும் பொழுது நம்பிக்கை தரும் மருந்துகளை விரைவில் அங்கீகாரம் செய்வதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும் மருந்துகளாக பயன்படும் புதிய மூலக்கூறுகளை தொழில் துறையினரும் கல்வித் துறையினரும் உருவாக்குவதற்கும் கண்டுபிடிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் அமெரிக்க அரசு ஆதரிக்கும் என அந்தோணி கூறினார். தற்பொழுது பைசர், அஸ்ட்ராஜெனகா, ரோச் ஆகிய மருந்து கம்பெனிகள் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மாத்திரைகளை உருவாக்க ஆய்வுகளை நடத்தி வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
விரைவில் வெளிநாடுகளுக்கு 5.5 கோடி கரோனா தடுப்பூசிகளை அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் என்று குறிப்பிட்டார். வெளிநாடுகளுக்கு 8 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா அனுப்பும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திட்டத்தின் கீழ் 5.5 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்படும் எனவும் அந்தோணி தெரிவித்தார்.அது தவிர உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் அமைப்பு மூலமாக 2.5 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளை கனடாவும் மெக்சிகோவும் பெற்றுள்ளன. இனி ஒவ்வொரு வாரமும் வெளிநாடுகளுக்கு அனுப்பும் தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கை கூடுதலாக அமையும் என்று அந்தோணி குறிப்பிட்டார்.