» செய்திகள் - விளையாட்டு » உலகம்
செவ்வாய் கிரகத்தில் சீனாவின் விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு
வியாழன் 20, மே 2021 11:25:47 AM (IST)
செவ்வாய் கிரகத்தில் தியான்வென்-1 விண்கலம் எடுத்த புகைப்படங்களை சீன விண்வெளி மையம் இன்று வெளியிட்டுள்ளது.
உலக அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வல்லரசு நாடுகள், விண்வெளியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட நீண்ட காலமாகவே முயற்சித்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நாடுகளின் கவனம் பின்னர் செவ்வாய் கிரகத்தின் பக்கம் திரும்பியது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளன.
சந்திரயான் விண்கலத்தின் மூலம் நிலவில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை இந்தியா கண்டறிந்தது, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். இதற்கிடையில் சீனா அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் கடந்த 15-ம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், தியான்வென் 1 ரோவர் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் செவ்வாய் கிரகத்தில் எடுத்துள்ள புகைப்படங்களை சீன விண்வெளி மையம் இன்று வெளியிட்டுள்ளது.