» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜஸ்தானில் கனமழை: வெள்ளத்தால் மூழ்கிய மாவட்டங்கள்... மீட்பு பணியில் ராணுவம்!!

புதன் 24, ஆகஸ்ட் 2022 10:39:15 AM (IST)



ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஜலாவர், தோல்பூர், பாரன் உட்பட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

ராஜஸ்தான் மாநிலத்தில் பாரன், ஜலாவர் மாவட்டங்களில் நீரால் சூழப்பட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். கோட்டா, பாரன், ஜலாவர், புண்டி மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தின் சம்பல், பர்வான், பார்வதி, காளிசிந்த் ஆகிய ஆறுகள் பொங்கிப் பாயும் நிலையில், அணைக்கட்டுகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

உதய்ப்பூர், சித்தோர்கர், பிரதாப்கர் ஆகிய நகரங்களின் பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். பாரன் மாவட்டத்தின் 2 இடங்களில் இருந்து 15 பேரும், மேலும் இரு இடங்களில் இருந்து 81 பேரும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகளால் மீட்கப்பட்டுள்ளனர் என அம்மாவட்ட கலெக்டர் நரேந்திர குப்தா தெரிவித்துள்ளார்.

தோல்பூர், ஜலாவர் மாவட்டங்களில் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணத் துறை செயலாளர் அசுதோஷ் பெட்னேக்கர் தெரிவித்துள்ளார். வெள்ளப் பகுதியில் சிக்கிய 53 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 49 பேர் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்கள் என்றும் ஜலாவர் மாவட்ட கலெக்டர் பாரதி தீக்சித் கூறினார்.

சம்பல் நதியில் வெள்ளம் அதிகரித்துவரும் நிலையில், கராலி பகுதியில் பல கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பல கிராமங்கள் வெளித்தொடர்பு துண்டிக்கப்பட்டு தனித்தீவுகளாகி உள்ளன. அந்தக் கிராம மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பன்ஸ்வாரா, துங்கர்பூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், பில்வாரா, சித்தோர்கர் மாவட்டங்களில் கனமழையும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அம்மாவட்ட மக்கள் கவலை அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory