» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து : பாஜக எம்.எல்.ஏ கைது கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்!
செவ்வாய் 23, ஆகஸ்ட் 2022 3:54:55 PM (IST)
தெலங்கானாவில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் கோஷாமால் தொகுதியின் எம்எல்ஏவான ராஜா சிங் மேடை நகைச்சுவைக் கலைஞரான முனாவர் பரூக்கி என்பவரை விமர்சித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நபிகள் நாயகம் பற்றி அவதூறான கருத்தைத் தெரிவித்ததுடன் நபிகள் பற்றி தொலைக்காட்சி விவாதத்தில் பேசி சர்ச்சையான நூபுர் சர்மாவின் கருத்தை மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்த விடியோ வைரலானதால் எம்எல்ஏவின் பேச்சைக் கேட்ட இஸ்லாமியர்கள் பலர் நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவில் ராஜா சிங்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக வழக்குப் பதியப்பட்டு இன்று காலை எம்எல்ஏ ராஜா சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் நேற்றிரவு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக திரண்ட அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் மீது முகமது நபிக்கு எதிராக அவதூறான கருத்து தெரிவித்ததற்காக இன்று காலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முகமது நபிக்கு எதிராக அவதூறான கருத்து தெரிவித்ததற்காக அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.