» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நேரலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மிரட்டியதாக புகார் : கேஜரிவாலிடம் நீதி கேட்ட தொகுப்பாளினி!
சனி 20, ஆகஸ்ட் 2022 5:40:29 PM (IST)
ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. பரத்வாஜ், தொலைக்காட்சி நேரலை விவாதத்தின் போது அநாகரிகமாக நடந்துக்கொண்டதற்கு அரவிந்த் கேஜரிவாலிடம் தொகுப்பாளினி அதிதி தியாகி நீதி கேட்டுள்ளார் .
மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, டெல்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். இந்த வழக்கில் 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் இதைப்பற்றி விவாதம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பரத்வாஜ் கலந்து கொண்டார். விவாதத்தின் போது, தொகுப்பாளினி அதிதி தியாகிடம் "ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி. உங்களுக்கு மரியாதை பற்றி சொல்லிக் கொடுத்தது போல நானும் சொல்லிதர விரும்புகிறேன். இப்படித்தான் உங்களுடன் பணிபுரிபவர்கள், குடும்பம் மற்றும் நண்பர்களுடனும் பேசுவீர்களா?” என பரத்வாஜ் பேசினார்.
இதைப்பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளினி அதிதி தனது டிவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை டேக் செய்து, "மதிப்பிற்குரிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அவர்களே, ஆம் ஆத்மியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்னை நேரலையில் மிரட்டுகிறார். அவர் என்னையும் எனது குடும்பத்தை பற்றியும் பேசுகிறார். இந்த விவகாரத்தில் உங்களுடைய நடவடிக்கை குறித்து நாட்டின் 65 கோடி பெண்களும் காத்திருக்கின்றனர்” என பதிவிட்டுள்ளார்.