» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மும்பையில் 60 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 19வது மாடியில் இருந்து குதித்தவர் பலி
வெள்ளி 22, அக்டோபர் 2021 3:57:24 PM (IST)
மும்பையில் உள்ள அவிக்னாபார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது. 19வது மாடியில் இருந்து குதித்த நபர் உயிரிழந்தார்.
மும்பையில் உள்ள குர்ரே சாலையில் அவிக்னாபார்க் என்ற 60 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் 19-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று மதியம் 12.25 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதனால் 18 மற்றும் 19-ம் மாடியில் உள்ள பல வீடுகள் தீப்பற்றி எரிந்தன.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்துக்கு வந்தன. அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். கட்டிடத்தில் தீ பிடித்த பகுதி உயரமான இடத்தில் இருந்ததால் நவீன எந்திர வாகனத்தின் ஏணியின் மூலமாக அந்த பகுதிக்கு சென்றார்கள். அங்கிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணி நடந்தது.
அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பற்றியதுமே அந்த குடியிருப்பில் இருந்த அனைத்து வீடுகளில் இருந்தும் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 19வது மாடியில் இருந்து குதித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் முழுமையாக தீயை அணைத்த பிறகுதான் மற்ற விவரங்கள் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.